தர்மபுரி மருத்துவ கல்லூரியில் இன்று டெல்லி குழு ஆய்வு

சென்னை: தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரியில் இந்திய மருத்துவக் கவுன்சில் அதிகாரிகள் குழு இன்று மீண்டும் ஆய்வு செய்கிறது.

100 எம்பிபிஎஸ் இடங்களுடன் கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட இந்தக் கல்லூரியில் முதலாம் ஆண்டு முடித்து இரண்டாம் ஆண்டு மாணவர்கள் படித்து வருகின்றனர்.

இந் நிலையில் கடந்த மாதம் கல்லூரியை ஆய்வு செய்த இந்திய மருத்துவக் கவுன்சில் அதிகாரிகள் குழு, அடிப்படைக் கட்டமைப்பு குறைபாடுகளை சுட்டிக்காட்டி நடப்புக் கல்வி ஆண்டில் மாணவர்களைச் சேர்க்கக் கூடாது என உத்தரவிட்டது.

இதையடுத்து தமிழக சுகாதாரத் துறை அதிகாரிகள் டெல்லி சென்று குறைபாடுகளை உடனடியாக சரி செய்துவிட்டதாகவும் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி தர வேண்டும் என்றும் மத்திய சுகாதாரத் துறை உயர் அதிகாரிகளிடம் முறையிட்டனர்.

இதைத் தொடர்ந்து 3 பேர் கொண்ட இந்திய மருத்துவக் கவுன்சில் அதிகாரிகள் குழு இன்று தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரியில் மீண்டும் ஆய்வு செய்கிறது.

இந்தக் குழு மாணவர் சேர்க்கைக்கு அனுமதி தந்தால் தமிழகத்தில் 100 எம்பிபிஎஸ் இடங்கள் கூடும். எனினும் ஆகஸ்ட் மாதம் இரண்டாம் கட்ட எம்பிபிஎஸ் கவுன்சலிங்கின்போதுதான், இந்தக் கல்லூரியில் மாணவர்களைச் சேர்க்க முடியும் என்று தெரிகிறது.

எம்பிபிஎஸ் முதல் கட்ட கவுன்சலிங் வரும் 6ம் தேதி தொடங்குவது குறிப்பிடத்தக்கது.

பிசி வகுப்பினர் கட்-ஆப் 196.75:

இந் நிலையில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ் இடங்களில் சேர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கான கட்-ஆப் மதிப்பெண் 196.75 ஆக இருக்கும் என்று தெரிகிறது.

முற்படுத்தப்பட்ட மாணவர்கள் உள்பட பொதுப் பிரிவு மாணவர்களுக்கான கட்-ஆப் மதிப்பெண் 197.75 ஆக உள்ளது.

இந் நிலையில் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கான கட்-ஆப் ஒரு மதிப்பெண் மட்டும் குறைந்து 196.75 ஆக இருக்கும் என்று தெரிகிறது.

Source & Thanks : /thatstamil.oneindia.in

Leave a Reply

Press Ctrl+g to toggle between English and Tamil